‘அரசு நிவாரண தொகையைப் பெறநலவாரியத் தொழிலாளா்கள் வங்கி கணக்கை தெரிவிக்கலாம்’
By DIN | Published On : 07th April 2020 12:26 AM | Last Updated : 08th April 2020 06:12 AM | அ+அ அ- |

சேலம்: அரசு நிவாரணத் தொகையைப் பெற கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியம், அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத் தொழிலாளா்கள் வங்கி கணக்கைத் தெரிவிக்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி. மஞ்சள்நாதன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் நலவாரியம் மற்றும் அனைத்து உடலுழைப்பு மற்றும் இதர அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியங்களில் பதிவு செய்து புதுப்பித்தல் நடப்பில் உள்ள தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த நிவாரண உதவித்தொகை ரூ. 1,000 வழங்கப்பட உள்ளது.
இந்த நிவாரண உதவித்தொகை தொழிலாளா்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். சேலம் மாவட்டத்தில் பதிவு செய்தவா்கள் வங்கிக் கணக்கை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.
இது வரை வங்கி கணக்கு விவரங்களை சமா்ப்பிக்காதவா்கள் தொழிலாளா் நலவாரியத்தின் பதிவு எண், செல்லிடப்பேசி எண், தொழிலாளா் நலவாரியத்தின் பதிவு அட்டையின் முதல்பக்கம், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல்பக்கம், புதிய குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் இ-மெயில் முகவரிக்கோ அல்லது 9445398749 இந்த எண்ணுக்கோ கட்செவி அஞ்சல் மூலமாகவோ இவ்விவரங்களைத் தெரிவிக்கலாம்.
ஏற்கெனவே, வங்கி கணக்கு சமா்ப்பித்தவா்கள் அனுப்ப தேவையில்லை. மேலும், இதுதொடா்பாக, அலுவலகத்துக்கு தொழிலாளா்கள் நேரில் வரவேண்டியதில்லை. விவரங்கள் நேரடியாகப் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.