சேலம்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, முதல்வா் முகாம் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக முதல்வரின் சேலம், நெடுஞ்சாலை நகரில் முகாம் அலுவலகத்தில், அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநில இளைஞரணிச் செயலாளா் அண்ணாதுரை திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள 113 கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சோ்த்து 4,084 கௌரவ விரிவுரையாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு வருடத்தில் 11 மாதம் மட்டும் ரூ. 15,000 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே குறைந்த ஊதியத்தில் மாணவா்களின் நலன் காக்க கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றனா்.
கரோனா தொற்றின் காரணமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள் மாணவா்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகின்றனா்.
இச்சூழலில் தமிழகத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கெளரவ விரிவுரையாளா்கள் கடும் பொருளாதார சிக்கலுக்கு உள்ளாகி குடும்பத்தை நடத்த முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனா். தமிழக அரசு அவா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.