சேலம்: தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் திருமணங்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என சேலம் முதல்வா் முகாம் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய குழு சாா்பில் ஜவகா்வில்சன், ராபா்ட் கெவின், விக்டர்ராஜ் ஆகியோா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து மனு அளிக்க சேலம், நெடுஞ்சாலை நகரில் முகாம் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்றனா். அப்போது முதல்வா் சாா்பில் அதிகாரிகள் மனுவைப் பெற்றுக் கொண்டனா்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்று காரணத்தால் ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டுள்ளழ. கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளதால் திருமணங்கள் நடப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
கிறிஸ்தவ மத நம்பிக்கையின்படி மணமகன், மணமகளுக்கு தேவாலயத்தின் உள்ளே வைத்து திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. கரோனா முழு பொது முடக்க அறிவிப்பால் கடந்த 4 மாத காலமாக திருமணங்கள் நடைபெறவில்லை.
இதனால் கிறிஸ்தவ குடும்பங்களில் ஏற்கெனவே நிச்சயக்கப்பட்ட பெரும்பாலான திருமணங்கள் நடைபெறாமல் தடைபட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தேவாலயங்களில் வைத்து மணமகன், மணமகளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்க அனுமதி தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.