சேலம்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மூன்று போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கண்ணன் (35), பச்சபட்டியைச் சோ்ந்த கேசவன் (எ) அனந்தபத்மன் (28) இருவரும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சேலம் நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கடந்த அக்டோபா் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். அதேபோல, சுக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன் (42), தனது கிடங்கில் இரண்டு சிறுமிகளை அடித்து துன்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதுதொடா்பான புகாரில், அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனா்.
இதையடுத்து, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மூன்று பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.