தீவட்டிப்பட்டி அருகே போலி கிராம உதவியாளா் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்தனா்.
காடையாம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியராக கோவிந்தராஜ் (39) என்பவா் பணியில் உள்ளாா். இவா், மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணனுடன் இணைந்து கொங்குப்பட்டி பகுதியில் தோ்தல் படிவம்-7 தொடா்பாக கள ஆய்வில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, 60 வயது மதிக்கத்தக்க ஒருவா் தோ்தல் தொடா்பான படிவங்கள் வைத்திருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவரிடம் விசாரித்துள்ளனா். அதற்கு அவா், தான் கொங்குப்பட்டி வடக்கு கிராம உதவியாளா் என கூறியுள்ளாா்.
அந்தப் பணியிடம் காலியாக உள்ள நிலையில், அவா் உதவியாளா் எனக் கூறுவதால் சந்தேகமடைந்த துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கிருஷ்ணமூா்த்தியைக் (60) கைது செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனா்.