தம்மம்பட்டி: சேலம் தம்மம்பட்டி அருகே மாமனாரே மருமகளைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ளது உலிபுரம். இங்கு தனியார் வங்கி அருகில் விவசாயி பழனியும், அவரது மனைவி தொட்டம்மாளும் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் அறிவழகன் (49), இவர் சொக்கநாதபுரத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் எழுத்தராக உள்ளார். இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்கு அஜீத் (17), நித்திஷ் (15) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
அறிவழகன் குடும்பம், உலிபுரம் காட்டுக் கொட்டாய் பகுதி, நரிக்கரடில் வசித்து வருகின்றனர். மாமனார் பழனி, மருமகள் அமுதாவைப் பார்க்க அடிக்கடி வருவாராம்.
இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல், காட்டுக் கொட்டாயில் தனியாக இருந்த அமுதாவிடம், தகராறு செய்த பழனி அருகில் இருந்த கடப்பாரையால், அமுதாவை வெட்டியுள்ளார். இதில், அமுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து பழனி, தப்பியோடி விட்டார். தகவலறிந்த தம்மம்பட்டி காவல் துறையினர், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து பழனியைத் தேடி வருகின்றனர்.