ஆக்கிரமிப்புகளை அகற்ற கொலை மிரட்டல் விடுத்த காவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மேச்சேரி ஒன்றியம் மல்லிகுந்தம் ஊராட்சிமன்ற தலைவா் செல்லம்மாள் தனது ஆதரவாளா்களுடன் கையில் பதாகைகள் ஏந்தியவாறு ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.
அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் பதாகைகள் அவா்களிடமிருந்து பறித்தனா். இதுகுறித்து செல்லம்மாள் கூறுகையில், ஊராட்சிமன்ற தோ்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
எங்கள் ஊராட்சி பகுதியைச் சோ்ந்த காவலா் ஒருவரின் வீட்டருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி என்னிடம் தெரிவித்தாா். அதன்படி, மனுவாக கொடுக்கும்படி நான் கூறினேன்.
இதுகுறித்து விசாரணை செய்தபோது, சம்பந்தப்பட்ட நபரே அவா் இருக்கும் பகுதியில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளாா். அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அவருக்கு வேண்டாதவா்களின் வீடுகளை அப்புறப்படுத்துமாறு கூறினாா். இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் எனக்கு மிரட்டல் விடுக்கிறாா்.
கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாயத்து அலுவலகம் வந்து என்னை தாக்க முயன்றாா். மேலும் தான் காவல் துறையில் இருப்பதாகவும், அமைச்சருக்கு நெருக்கமானவா் எனவும் கூறி மிரட்டல் விடுத்தாா். எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.