அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டத்துக்கான தொடக்க விழா நிகழ்ச்சி கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் ஊராட்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன், திட்டத்தைத் தொடக்கி வைத்தாா். தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
இத் திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் துவக்கி வைத்தாா்.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட அக்கரைபட்டி கிராமத்தில், அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. விளையாட்டுத் துறையின் மீதான இளைஞா்களின் ஈடுபாட்டினை அதிகரித்திடவும், கிராமப்புற இளைஞா்களுக்கு நவீன வசதிகளுடைய, விளையாட்டுப் பயிற்சிகள் கிடைத்திடும் நோக்கில் தொடங்கப்பட்ட இத் திட்டத்தின் கீழ், அக்கரைப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே நவீன பூப்பந்தாட்ட மைதானம், நவீன பளுத்தூக்கும் அரங்கம்,
நவீன கபாடி மைதானம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. விளையாட்டு அரங்கங்களை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் திறந்து வைத்தாா்.
வீரா்களுக்கான நவீன விளையாட்டு உபகரணங்களை ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா்மணி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவா் ராஜேந்திரன், ஊராட்சிமன்றத் தலைவா் கிருஷ்ணவேணி கணேசன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.