தம்மம்பட்டியில் கொல்லிமலை பலாப்பழங்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில், விற்பனையாமல் கிடப்பதால், மலைவாழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
கொல்லிமலையில், குண்டனி, எண்ணாம்பாலி, தேனூர், நரியன்காடு, செங்கரை, வேலிக்காடு, கீரைக்காடு, அரவங்காடு, ஆலத்தூர், புதுவலவு, மங்களம், பெல்லக்காடு, குளத்துக்காடு, நடுக்கோம்பை, அடுக்கம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு, அதிகளவு பலாமரங்கள் உள்ளன. இங்கு விளையும் பலாபழங்கள் மிகவும், இனிப்பாக சுவை மிகுந்து இருக்கும். இதனால், கொல்லிமலையில் விளையும், பலாப்பழங்களை வெளியூர் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வார்கள்.
இம்மலைவாழ் மக்கள், மலையடிவாரப் பகுதியில் உள்ள புளியஞ்சோலை, சேந்தமங்கலம், காரவள்ளி, முள்ளுக்குறிச்சி மற்றும் தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். தற்போது, கொல்லிமலையில் பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால், கொல்லிமலை அடிவாரப்பகுதியில் உள்ள தம்மம்பட்டியில் விற்பனைக்காக, தினமும் பலாப்பழங்கள் குவிந்து வருகிறது. ஆனால், மக்களிடையே கரோனா தொற்று அச்சம் காரணமாக, பலாப்பழத்தை வாங்க அதிகம் முன்வரவில்லை.
இதனால், பலாப்பழத்தின் விலையை வெகுவாக குறைத்துள்ள போதும், மக்களிடையே உள்ள கரோனா அச்சம் காரணமாக, பலாப்பழங்கள் சரிவர விற்பனையாகாமல், அவைகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், பலாப்பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள மலைவாழ் மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.