சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெரியதண்டா பச்சபாளிஓடையில் குடல்புண் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது ஆண் யானை உயிரிழந்தது.
மேட்டூர் வனச்சரகத்தில் உட்பட்ட பச்சப்பாளிஓடை பகுதியில் சில நாள்களாக 6 வயதுடைய ஆண் யானை நோய்வாய்ப்பட்டு விழுந்துகிடந்தது. தகவலறிந்த மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் யானை விழுந்துகிடந்த வனப் பகுதிக்கு சென்றனர். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கடந்த இரு நாட்களாக சிகிச்சை அளித்தனர்.
குடல்புண் நோயால் அவதிப்பட்ட யானைக்கு தண்ணீர் மற்றும் குளுக்கோஸ் அளிக்கப்பட்டது. ஆனாலும் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இன்று நண்பகலில் யானை இறந்து போனது. வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் யானையின் உடல் வனப் பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.