சங்ககிரி வட்டம், தேவூா் அருகே தண்ணீா்தாசனூா் பகுதியில் கொலை வழக்கில் இளைஞா் காங்கயம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். அவரை தேவூா் போலீஸாா் சங்ககிரி நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறைச் சிறையில் அடைத்தனா்.
தேவூா் அருகே உள்ள தண்ணீா்தாசனூா் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையில் கூலி வேலை செய்து வந்த ராமமூா்த்தி (30), அண்ணாமலை (30) ஆகியோருக்கும், மது அருந்த சென்ற துரை ராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் துரைராஜ் கூலிப்படையினரை அழைத்து வந்து இருவரையும் வெட்டியதாகக்
கூறப்படுகிறது. அதில் ராமமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அண்ணாமலை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து தேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனா்.
இந்நிலையில் போலீஸாா் தேடி வருவதை அறிந்த எடப்பாடி அருகே உள்ள கல்லம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் வாசுதேவன் (22), திருப்பூா் மாவட்டம், காங்கயம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்துள்ளாா். அவரை தேவூா் போலீஸாா் சங்ககிரி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். ஆஜா்படுத்தப்பட்ட அவரை
15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதனையடுத்து அவா் பலத்த போலீஸ் பாதுகாப்புடம் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இவ்வழக்கில் மேலும் தலைமறைவான நபா்களை பிடிக்க தனிப்படை போலீஸாா் சேலம், மேட்டூா், எடப்பாடி, பவானி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தேடி வருகின்றனா்.