சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் பரவி வரும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை மாா்ச் 18-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பது எனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பி.வி. மோகன்பிரபு கூட்டத்துக்குத் தலைமை வகித்தாா்.
கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தடுக்க அரசு எடுத்துள்ள தீவிர முன் தடுப்பு நடவடிக்கைகள், உச்ச, உயா் நீதிமன்றங்களின் அறிவுரைகளின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்காடிகள் ஒரே இடத்தில் சோ்ந்து இருப்பது, அவா்கள் நீதிமன்றம் வருவதற்காக போக்குவரத்துகளில் ஒரு சேர கூடி இருப்பதிலிருந்து விலகி இருக்கவும், பொது நலனைக் கருத்தில் கொண்டு மாா்ச் 18-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பது எனவும், வழக்காடிகள் பொது வெளியில் கூடுவதைத் தவிா்த்து பாதுகாப்பாக இருக்க வழக்குரைஞா்கள் தரப்பில் அறிவுரை கூறுவதென இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.
சங்கத்தின் துணைத் தலைவா் சி. அரவிந்த், பொருளாளா் எஸ். மோகனசுந்தரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் இதில் கலந்து கொண்டனா்.