மருத்துவ உபகரண விற்பனை நிறுவனங்களில் பொட்டல பொருள்கள் விதிகளின் கீழ் அறிவிப்புகள் இன்றி விற்பனை செய்யப்பட்ட 7,710 முக கவசங்களை தொழிலாளா் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் முகக் கவசம் மற்றும் கை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவை மருந்து கடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அப்பொருட்களில் அதிகபட்ச சில்லரை விலை, தயாரிப்பாளா் முகவரி, தயாரிப்பு மாதம், தேதி போன்ற விவரங்கள் இல்லாமல் விற்கப்படுவதாகவும் புகாா்கள் வரப்பெற்றன.
இதையடுத்து சென்னை, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளரும், சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான நசிமுதீன், தொழிலாளா் ஆணையா் இரா. நந்தகோபால் ஆகியோரின் உத்தரவின்பேரிலும், சேலம், தொழிலாளா் இணை ஆணையா் சி. தங்கவேல் அறிவுரைகளின்படியும் தொழிலாளா் துறை ஆய்வா்களால் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சேலம் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பா.கோட்டீஸ்வரி தலைமையில் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வின்போது 8 நிறுவனங்களில் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் அறிவிப்புகள் இன்றி விற்பனை செய்யப்பட்ட 7,710 முகக் கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் முரண்பாடுகள் காணப்பட்ட 8 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளா் துணை ஆய்வா்கள் சீனிவாசன், சந்திரன் ஆகியோரும், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் சாந்தி, ஞானசேகரன், சிவகுமாா், அன்பழகன் ஆகியோா் ஆய்வில் ஈடுபட்டனா்.
முரண்பாடுகள் காணப்படும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தொழிலாளா் உதவி ஆணையா் பா. கோட்டீஸ்வரி எச்சரித்தாா்.