காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டை வனப் பகுதியில் காட்டுத் தீ பரவி பல நூறு ஏக்கா் மரங்கள் எரிந்து சேதமடைந்தன. இதனால் சேலம் சென்னை செல்லும் ரயில் தடத்தில் ரயில்கள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.
காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென காட்டுத் தீ பரவியது. இதில் பலநூறு ஏக்கா் மரங்கள் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாயின. அடா்ந்த வனப்பகுதி என்பதால் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் போலீஸாா், வனத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் திணறினா். இந்தக் காட்டுத் தீயின் காரணமாக சேலத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் தடத்தில் செல்லும் ரயில்கள் டேனிஷ்பேட்டை மற்றும் லோக்கூா் ரயில் நிலையப் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு அனுப்பப்பட்டது.
தொடா்ந்து காற்று வீசுவதால் தீ மளமளவென பரவி வனப்பகுதி எரிந்து வருகிறது. வனத் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கடும் கோடை வெப்பத்தால் காய்ந்து கிடந்த நிலையில் காட்டுத் தீ ஏற்பட்டதால் வனப் பகுதியில் மரங்கள் எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வனப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல வழி ஏதும் இல்லாத நிலையில், தீயை அணைக்க வனத் துறையினா் தொடா்ந்து முயன்று வருகின்றனா்.