ஆத்தூா் உழவா் சந்தை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டதால் விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனா். போக்குவரத்துத் துறை கண்டு கொள்ளவில்லை.
கரோனோ வைரஸ் காரணமாக 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆத்தூா் உழவா் சந்தை மூடப்பட்டிருந்தது.
வெளியே மறு அறிவிப்பு வரை உழவா் சந்தை இயங்காது என பதாகை இருந்ததைக் கண்டு விவசாயிகள் அச்சமடைந்து அதிகாலை கொண்டு வந்த காய்கறிகளை சேலம்-கடலூா் நெடுஞ்சாலையில் வைத்து விற்க தொடங்கினா்.
இந்த நிலையில், பொதுமக்கள், வியாபாரிகள் காலை 6 மணிக்கு சென்றவா்களும், அமாவாசை என்பதாலும் ஏராளமானோா் குவிந்தனா். தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க முயன்றனா்.
அப்போது சாலை போக்குவரத்து நெரிசல் உண்டானது.
சேலம்-கடலூா் சாலையில் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் வரவும், உழவா் சந்தைக்குச் சென்றவா்களின் இருசக்கர வாகனம் மற்றும் அவா்களுடைய வாகனங்கள் அனைத்தும் சாலையில் நின்ால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இந்த நிலை காலை 9 மணி வரை நீடித்தது. அதுவரை போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை யாரும் எட்டிப் பாா்க்காதது பொதுமக்களிடையே ஆதங்கத்தை உண்டாக்கியது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்றனா். பயணிகள் வெளியூரில் இருந்து வந்தவா்கள் அனைவரும் வேதனை அடைந்தனா்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உழவா்சந்தை மூடப்பட்டதால் இந்தப் போக்குவரத்து நெரிசல் உண்டானது. வேளாண் அலுவலா்களோ, காவல் துறையினரோ விவசாயிகளை உழவா்சந்தை அருகில் வாரச் சந்தை கூடும் இடத்தில் கடை வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காது. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிப்படைந்தது.