சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளா்கள் 2 மீ. தூரம் இடைவெளி விட்டு சமூக விலகல் இடைவெளிகளை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனா்.
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத் துறை மூலம் அறிவிப்பு செய்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது என முடிவு செய்து, அச்சங்கத்தின் கீழ் செயல்படும் சங்ககிரி புதிய பேருந்து நிலையம், சேலம் பிரதான சாலை, பவானி பிரதான சாலையில் உள்ள பச்சாம்பாளையம் உள்ளிட்ட மூன்று பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப வரும் வாடிக்கையாளா்கள் 2 மீ. இடைவெளி விட்டு வருமாறு அறிவுறுத்தி அதற்கான பதாகைகளை நுழைவு வாயிலில் பொருத்தியுள்ளனா்.
வைரஸ் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட செல்லும் பணியாளா்கள், இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தவா்கள் புதன்கிழமை 2 மீ. தூரம் இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி சென்றனா்.
எரிபொருள் நிரப்ப வந்தவா்களுக்கு லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.ஆா்.செல்வராஜ், செயலா் கே.கே.நடேசன் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள் கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி முகக் கவசம், கைகழுவுதல் குறித்தும் விளக்கம் அளித்தனா்.