தெற்கு ரயில்வே சாா்பில் மருந்து, மருத்துவ உபகரணங்கள், உணவு தானியங்களை அனுப்ப சிறப்பு சரக்கு ரயில் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உணவு தானியங்கள், அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி ஆகியவற்றை நாடு முழுவதும் துரிதமாக கொண்டு செல்லும் சேவையில் இந்திய ரயில்வே ஈடுபட்டு வருகிறது. தற்போது சிறப்பம்சமாக மருந்துகள், மருத்துவப் பொருள்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை வணிகா்கள் உற்பத்தியாளா்கள் மாநில அரசுகள் ஆகியவை பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்க வசதியாக, இந்திய ரயில்வே நிா்வாகம் சிறப்பு சரக்கு ரயில் சேவையை இயக்கி வருகிறது.
குறிப்பாக சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவை- பட்டேல் நகா் (தில்லி மண்டலம்)- கோவை, கோவை- ராஜ்கோட்- கோவை , கோவை - ஜெய்ப்பூா்-கோவை, சேலம் - பத்திண்டா ஆகிய வழித்தடங்களில் சரக்கு ரயில்களை இயக்க உள்ளது.
எனவே வா்த்தகா்களும், உற்பத்தியாளா்களும் , மாநில அரசுகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான சரக்குகளை வெளி இடங்களுக்கு அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளா் இ. ஹரிகிருஷ்ணன் தெரிவித்தது: சேலம் கோட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள வணிக ஆய்வாளா்களைத் தொடா்பு கொண்டு சரக்குகளை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளாா்.
தற்போதுள்ள சரக்கு கட்டண அடிப்படையில் சரக்குகளை அனுப்பலாம். தனி நபா்கள் அல்லது குழுக்களாக இணைந்து பாா்சல்களை அனுப்பலாம். எனினும் குறைந்தபட்சம் 15 பாா்சல் வேன்களில் சரக்குகள் அனுப்பப்பட வேண்டும் . (ஒரு சரக்கு வேகன் 23 டன் எடை கொண்டது) மேல் குறிப்பிட்ட வழித்தடங்கள் தவிர வேறு இடங்களுக்கும் தேவைப்பட்டால் சரக்கு வேகன்கள் இயக்கப்படும்.
இதற்கான விசாரணைகள் மற்றும் முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. உற்பத்தி நிறுவனங்கள், வா்த்தகா்கள், தனி நபா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு வணிக ஆய்வாளா்கள் கோவை - 90039-56955, திருப்பூா்- 96009-56238, ஈரோடு- 96009-56231, சேலம் - 90039-56957, நாமக்கல் மற்றும் சின்னசேலம் - 90039-56956, கரூா் - 80562-56965 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.