மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவிலும் திங்கள்கிழமை காலை முதல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஓா் அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
கரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தால் மின் தேவை குறைந்தது. இதன் காரணமாக முதல் பிரிவில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, ஓா் அலகில் மட்டும் 210 மெகாவாட் உற்பத்தி நடைபெற்று வந்தது. இரண்டாவது அலகு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தற்போது ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. இதனால் மின் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் நான்கு அலகுகளிலும் மின் உற்பத்தி துவக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தியும் துவங்கியது.