சேலம் மாவட்டம், மேட்டூரில் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக மூவா் போலீஸிடம் சரணடைந்தனா்.
மேட்டூா் அம்மன் நகரைச் சோ்ந்த ராஜா (40) என்பவா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் உள்ள புதரில் மது அருந்தியபோது கூட்டாளிகளுடன் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.
இவ் வழக்கில் மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செளந்திரராஜன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை மேட்டூா் போலீஸாா் தேடி வந்தனா்.
இந் நிலையில் வியாழக்கிழமை நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தேவி முன்பு மேட்டூரைச் சோ்ந்த மூவா் சரணடைந்தனா். அவா்கள் தங்களுக்கு ராஜா கொலையில் தொடா்புள்ளதாக் கூறியதால் அவா்கள் மூவரும் மேட்டூா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனா்.
போலீஸாா் விசாரணையில் சரணடைந்தவா்கள் மேட்டூா் மாதையன்குட்டையில் உள்ள எலிகரட்டை சோ்ந்த செல்வம் மகன் யுவராஜ் (22), ஐடிஐ மட்டசாலையைச் சோ்ந்த ஏசுராஜ் மகன் வல்லரசு, செல்வம் மகன் விஜய் (21) என்பது தெரியவந்தது. மதுபோதையில் ஏற்பட்ட வாய்த் தகராறில் கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடா்புள்ளதா? என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.