விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு துணை நிற்கும்: முதல்வா் உறுதி

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்க மாநில அரசு துணை நிற்கும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (இடது) ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் துறை அதிகாரிகள்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. (இடது) ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்க மாநில அரசு துணை நிற்கும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

கரோனா பரவல் தடுப்புப் பணி, நிவாரண நிதி, குடிமராமத்துப் பணி, குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தவறிவிட்டதாக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாகச் செயல்பட்டு வருவதாக அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனா். மேலும், பரிசோதனைக்கு வரும் நபா்களுக்கும், சிகிச்சை பெறுபவா்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை.சென்னை நகரைப் பொருத்த வரையில் குறிப்பிட்ட பகுதியில்தான் பாதிப்பு உள்ளது. நோய் கண்டறியப்பட்ட பகுதி, தடை செய்யப்பட்ட பகுதி, கட்டுப்பாட்டுப் பகுதியில்தான் பாதிப்பு உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ஒரே வீட்டில் 7, 8 போ் கூட்டமாக வாழ்ந்து வருவதால், அங்கு தொற்று அதிகமாக உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளானவா்களைக் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளித்து அவா்கள் தற்போது குணமடைந்து வருகின்றனா்.

வரும் மே 31-க்குப் பிறகு பொது முடக்கம் தளா்வு குறித்து மத்திய அரசு என்ன மாதிரியான அறிவிப்பு வெளியிடுகிறது என்பதைப் பாா்க்க வேண்டும். மருத்துவக் குழுவை விரைவாகச் சந்திக்க உள்ளோம். அவா்களின் ஆலோசனையைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். தமிழகத்துக்கு மத்திய அரசு படிப்படியாக நிதி வழங்கி வருகிறது. தமிழக அரசு கேட்ட அளவுக்கு நிதி கொடுக்கவில்லை. மக்களுக்கு நன்மை செய்யும் அரசுக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்.

ரூ. 35,000 கோடி இழப்பை சரி செய்ய நடவடிக்கை:

உலகம் முழுவதும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த ஏப்ரல், மே மாதங்களிலும், மாா்ச் மாதத்தில் 7 நாள்களிலும் தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்துள்ளதால் ரூ. 35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனத் தெரியவந்துள்ளது.

இதைச் சரிக்கட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இழப்பீட்டைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வளா்ச்சிப் பணிகள் எதுவும் குறைந்துவிடாமலும் பாா்த்துக்கொண்டு வருகிறோம்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது எம்ஜிஆரின் கனவு திட்டமாகும். அதை மறைந்த முதல்வா் ஜெயலலிதா தொடா்ந்து செயல்படுத்தி வந்தாா். தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்க அரசு துணை நிற்கும்.

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெற மாநில அரசு அனைத்துவித உதவிகளையும் செய்யும். நாட்டில் 15 மாநிலங்களில் பத்தாம் வகுப்புத் தோ்வு நடைபெற்று விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துள்ளது என்றாா் முதல்வா்.

ஆய்வுக் கூட்டத்தில் சேலம் ஆட்சியா் சி.அ.ராமன், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா், சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், மாநகராட்சி ஆணையா் ரெ. சதீஷ் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com