சேலம் மாவட்டம், சங்ககிரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய, மாநில அரசுகள் இலவச மின்சாரத்திட்டத்தை ரத்து செய்யும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சங்ககிரி, வி.என்.பாளையம், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியன் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.நடராஜன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து மத்திய, மாநில அரசுகள் இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைவதுடன் விளைபொருள் உற்பத்திகளும் பெருளவில் குறையும் சூழல் ஏற்படும் எனவே இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை அரசுகள் கைவிட்டு விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.
சங்ககிரி நகரத்தலைவர் ஆர்.ரமேஷ், எஸ்சி,எஸ்டி வட்டாரத்தலைவர் ஆர்.பரமசிவம், வட்டார விவசாய அணி செயலர் கே.செல்வராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி சங்ககிரி காவல்துறையினர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.