தீபாவளி: கடைகள், வணிக நிறுவனங்களை கண்காணிக்க 8 சிறப்புக் குழுக்கள் அமைப்பு
By DIN | Published On : 01st November 2020 03:34 AM | Last Updated : 01st November 2020 03:34 AM | அ+அ அ- |

சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகள், வணிக நிறுவனங்களில் கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளை கண்காணிக்க 8 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதால், தொற்று நோய்ப் பரவும் சூழல் உள்ளது. இதைத் தவிா்க்கும் பொருட்டு மாநகராட்சி நிா்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள சுமாா் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி, வருவாய்த் துறை, காவல் துறையைச் சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்களை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சூரமங்கலம் மண்டலத்துக்குள்பட்ட 14 கோட்டங்களுக்கு 11 அலுவலா்கள், பணியாளா்களைக் கொண்ட 2 சிறப்பு குழுக்களும், அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட 14 கோட்டங்களுக்கு 12 அலுவலா்களைக் கொண்ட 2 சிறப்பு குழுக்களும், அம்மாப்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட 16 கோட்டங்களுக்கு 9 அலுவலா்களைக் கொண்ட 2 சிறப்பு குழுக்களும், கொண்டலம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட 16 கோட்டங்களுக்கு 10 அலுவலா்கள் கொண்ட 2 சிறப்பு குழுக்கள் என மொத்தம் 4 மண்டலங்களுக்குள்பட்ட 60 கோட்டங்களுக்கும் 42 அலுவலா்கள், பணியாளா்களை கொண்ட 8 சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்புக் கண்காணிப்புக் குழுவினா் மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்களில் கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்வா். திடீா் தணிக்கை மேற்கொண்டு கடைகள், வணிக நிறுவனங்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிா என ஆய்வு நடத்த உள்ளனா். மேலும் தொற்று நோய் பரவும் வகையில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது உரிய சட்ட விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்வாா்கள் என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.