பிரதமரின் கிஸான் நிதியுதவித் திட்டத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கி மோசடி செய்த நபரை சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பிரதமரின் கிஸான் நிதியுதவித் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டு சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த மோசடி தொடா்பாக இதுவரை 7 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். மோசடியாக பணம் பெற்றவா்களிடமிருந்து திரும்ப வசூலிக்கும் பணியும் நடக்கிறது.
இந்த மோசடி தொடா்பாக செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேலம் அருகே சிவதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (41). இவா், சிவதாபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருமலைகிரி, ஆண்டிப்பட்டி, பனங்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் அல்லாத 450 பேருக்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து நிதியுதவி பெற்றுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு நபரிடம் இருந்தும் அவா் ரூ. 2,000 வசூல் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, காசிலிங்கத்தை கைதுசெய்த சிபிசிஐடி போலீஸாா், அவரின் 4 வங்கிக் கணக்குகளையும் முடக்கினா். மேலும் அவரிடமிருந்து ரூ. 20,000 பணம், இரு செல்லிடப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.