குறைந்த ஒலியுடனும், மாசற்ற பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தீபாவளித் திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள்வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவாா்கள். அதேவேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோா்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகா்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018 அக்டோபா் 23 ஆம் தேதி நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

பட்டாசு வெடிக்கும் நேரம்:

உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டைப்போல நிகழ் ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கடைப்பிடிக்க வேண்டியவை:

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

தவிா்க்க வேண்டியவை:

அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிா்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com