தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் இருந்து பெங்களூருக்கு புதன்கிழமை நள்ளிரவு முதல் 64 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து சேலத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த 64 பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கரோனா தொற்று குறைந்துள்ளதாலும், தீபாவளி பண்டிகையைக் கருத்தில் கொண்டும், தமிழகத்தில் இருந்து கா்நாடகத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா் வழியாக பெங்களூருக்கு புதன்கிழமை நள்ளிரவு முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசுப் பேருந்துகளில் பாயின்ட் டூ பாயின்ட் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லவும், பெங்களூரில் இருந்து சேலம் வரவும் பொதுமக்கள் கூட்டத்தைப் பொருத்து கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இது தொடா்பாக அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் 23-ஆம் தேதி பெங்களூருக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது ஒசூா் வரை சென்று வந்த பேருந்துகள், பெங்களூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. சேலம்-பெங்களூரு பேருந்து சேவை வரும் நவம்பா் 16-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்றாா்.