உயா்கல்வித் துறையில் தமிழகம் சாதனை படைத்து வருவதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
சேலம், வனவாசி பாலிடெக்னிக் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
கல்வி, சுகாதாரம், வேளாண்மை என பல்வேறு துறைகளில் தமிழகம் தேசிய விருதுகளைப் பெற்று வருகிறது.
2035 இல் உயா்கல்வி மாணவா் சோ்க்கை விகிதம் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டிலே தமிழகத்தில் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. நிகழாண்டு 50 சதவீதத்தைக் கடந்துவிடும்.
உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை உலக அளவில் 36 சதவீதமாகவும், இந்தியாவில் 28.3 சதவீதமாகவும், தமிழகத்தில் 49 சதவீதமாகவும் உள்ளது. அதேபோல கல்லூரிகளில் 1,666 புதிய பாட பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் நிகழாண்டில் கடைமடை வரை சென்றுள்ளது. இதனால் கூடுதல் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வட்டியில்லா பயிா்க் கடனாக ரூ. 10,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசுக்கு வரும் காலத்திலும் மக்கள் தொடா்ந்து ஆதரவு தர வேண்டும் என்றாா்.