எடப்பாடி: கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7.5 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
கடந்த சில வாரங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஈரப்பதமான தட்பவெப்பநிலை நிலவி வருவதால் பருத்தி வெடிப்பு, அறுவடைப் பணிகள் குறைந்துள்ளன. இதனால் கடந்த சில வாரங்களாக கொங்கணாபுரம் கூட்டுறவு ஏல மையத்துக்கு பருத்தி வரத்து குறைந்துள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7.5 லட்சத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது. கொங்கணாபுரம் பகுதியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை மையத்தில் பருத்தி , நிலக்கடலை, எள் உள்ளிட்ட வேளாண் பொருள்கள் ஏலம் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 520 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன.
பி.டி ரக பருத்திகளே அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. பி.டி ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 4,250 முதல் ரூ. 5,450 வரை விற்கப்பட்டது. மொத்தம் ரூ. 7.5 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.