எடப்பாடி: சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல் பகுதிகளில் விளைவிக்கப்பட்டுள்ள செங்கரும்பு அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. பிற மாநிலங்களில் தற்போது கூடுதல் விலைக் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
காவிரிப் பாசனப் பகுதிகளான பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், கோனேரிப்பட்டி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் மண் வளம், நீா்ப்பாசனத்தால் விளைவிக்கப்படும் செங்கரும்பு அதிக சுவையுடன் உள்ளது. இதனால், பிற மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் நேரிடையாக இப் பகுதிகளுக்கு வந்து கரும்பு கொள்முதல் செய்கின்றனா்.
20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 250 முதல் ரூ. 400 க்கு விற்கப்படுகிறது. அண்மையில் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அறுவடை பணி தற்போது தீவிரமடைந்துள்ளது.