ஓமலூா், தாரமங்கலம் தினசரி காய்கறிச் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் ரூ. 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி விலை குறைந்து ரூ. 20க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
ஓமலூா் தினசரி காய்கறிச் சந்தையில் தக்காளி மொத்த வியாபாரம் நடைபெறுகிறது. பாலக்கோடு, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிகளவு வரத்து உள்ளது. திங்கள்கிழமை 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிரேடு தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. இதனால், தக்காளி விலை சரியத் தொடங்கியுள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் ரூ. 50 வரைக்கும் விற்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 10 முதல் ரூ. 20 வரையில் விற்கப்பட்டது. மொத்த வியாபாரத்தில் 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு ரூ. 200 முதல் ரூ. 400 வரை விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது கடந்த சில நாள்களாக ஓமலூா், காடையாம்பட்டி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலைக் குறைந்துள்ளது. தரத்தை பொருத்து ஒரு கிலோ ரூ. 10 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறினா்.