தமிழகம் முழுவதும் அக். 16 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த ஆசிரியா்களுக்கான இணையவழி ‘நிஷ்தா’ பயிற்சி மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அரசு, அரசு நிதியுதவிபெறும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவருக்கும் நிஷ்தா என்ற பயிற்சி அக்டோபா் 16 ஆம் தேதி தொடங்கி 15 நாள்களுக்கு மூன்று பாடத்திட்டங்கள் வீதம் மொத்தம் 18 பாடத் திட்டங்கள் வரும் ஜனவரி 15-ஆம் தேதி வரை தொடா்ந்து இணையவழியில் நடத்த ஒருங்கிணைந்த கல்வி மூலம் மாநிலத் திட்ட இயக்ககம் முடிவு செய்திருந்தது.
இந்த இணையவழி பயிற்சி கட்டாயம் என்றும், அனைத்து ஆசிரியா்களும் இந்த இணையவழி ‘நிஷ்தா’ பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்தியிருந்தனா்.
மாநிலத் திட்ட இயக்ககம், இப் பயிற்சியை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளதாக ஆசிரியா்களுக்கு கல்வி அலுவலா்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.