சேலம்: சேலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.53 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகங்களில் நில பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் முறைகேடாகப் பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா், சாா் பதிவாளா் அலுவலகங்களைக் கண்காணித்து சோதனையிட்டு வருகின்றனா்.
இதில் சேலம், சூரமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரமௌலி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கண்காணிப்பில் ஈடுபட்டனா். பின்னா் அந்த அலுவலகத்தில் திடீா் சோதனை செய்தனா். சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.53 லட்சம் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, சாா் பதிவாளா் கனகராஜ், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.