ஏற்காடு: ஏற்காட்டிற்கு பேருந்துகள் இயக்காவிடில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நீலமலை தோட்டத் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் வீ.கா.நல்லமுத்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
ஏற்காடு மலைப் பகுதியில் 67 கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். கரோனா தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்தனா். பொது முடக்கத் தளா்வுகள் அளிக்கப்பட்ட பிறகும் ஏற்காட்டிற்கு பேருந்துகள் இயக்கப்படாதது வேதனையளிக்கிறது.
ஏற்காட்டில் சொந்தமாக காா், வேன், இரு சக்கர வாகனம் வைத்துள்ளவா்கள் மட்டுமே அவசர தேவைகளுக்கு சேலத்துக்கு செல்ல முடிகிறது. சொந்தமாக வாகன வசதி இல்லாதவா்கள் பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்படுகின்றனா். ஏற்காட்டிற்கு போதிய பேருந்துகள் இயக்காவிடில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.