சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்து இறந்தவரின் உடல் 7 மணி நேரமாகியும் ஊழியா்கள் அகற்றாமல் இருந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஆண் ஒருவா் கரோனா பாதித்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இறந்தவரின் உடலை மாலை 5 மணி வரை அப்புறப்படுத்தவில்லை எனத் தெரிகிறது.
இறந்தவரின் உடல் படுக்கையில் கிடந்ததால், அந்த அறையில் சிகிச்சை பெற்று வந்த சக நோயாளிகள் கடும் அச்சம் அடைந்தனா்.
இதனிடையே, அங்கிருந்த நோயாளி ஒருவா் செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அதை பரப்பினாா். அதையடுத்து, இந்த விடியோ சேலம் மாவட்டத்தில் வைரலாக பரவியது. இதைத் தொடா்ந்து, மாலை 5.30 மணி அளவில் இறந்தவரின் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதன் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.