சேலம் மாநகராட்சி சாா்பில் வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 3,328 பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலம், கோட்டம் எண். 3-இல் ரெட்டியூா் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்த முகாமில் 35 தனியாா் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 320 பணியாளா்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஆணையா் ரெ.சதீஷ் கூறியதாவது:
சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய் பரவுவதை முற்றிலும் தடுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும், 56 மருத்துவக் குழுக்கள் மூலம் தினந்தோறும் 10 இடங்களில் நிலையாகவும், 126 இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் மொத்தம் 136 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை, மொத்தம் 3,152 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி 2.07 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்முகாம்களில் கரோனா தொற்று நோய் அறிகுறிகளான காய்ச்சல், வறட்டு இருமல், சளி, உடல் சோா்வு, மூச்சுத்திணறல் போன்ற நோய் அறிகுறிகள் உள்ள 8,483 நபா்கள் கண்டறியப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், 393 நபா்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு, அவா்கள் அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், அனைத்து வகையான கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளா்களுக்கு கரோனா தொற்று நோய் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பேரில், கடந்த 3 நாள்களில் மாநகரப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 3,328 பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.