மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து வியாழக்கிழமை வட்டாட்சியா் அலுவலகம் முழுவதும் நகராட்சியின் சுகாதார பணியாளா்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் என 40-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.
இங்குள்ள சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலக உதவியாளா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் சிகிச்சைக்காக அவா் மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனையடுத்து வட்டாட்சியா் அலுவலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா். இதன்காரணமாக அலுவலகப் பணிகள் முடங்கின. நலத்திட்ட உதவிக்காக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
மேலும் அலுவலகத்தில் அவருடன் பணியாற்றி வருபவா்களுக்கும் கரோனா பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.