சங்ககிரி 22 ஊராட்சிகளுக்கு முதன்முறையாக மின்கலத்தால் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்ட ஊராட்சி முகமை சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 22 ஊராட்சிகளுக்கு மின்கலத்தால் (பேட்டரியால்) இயக்கப்படும் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. சங்ககிரி ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் எம்.மகேஸ்வரிமருதாசலம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
சங்ககிரி அதிமுக ஒன்றிய மாணவரணி செயலர் கே.வெங்கடாஜலம் 22 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.47 லட்சம் மதிப்பீட்டில் மின்கலத்தால் (பேட்டரியால்) இயங்கும் 22 வாகனங்களை வழங்கிப் பேசினார். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளுக்கு முதல்முறையாக ஊராட்சிகளில் குப்பைகள் சேரிக்க மின்கலத்தால் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.எஸ்.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அனுராதா, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அதிமுக ஒன்றியச்செயலர்கள் கிழக்கு என்சிஆர்.ரத்தினம், மேற்கு சுந்தர்ராஜன், அதிமுக முன்னாள் தொகுதிகழகச் செயலர் வி.ஆர்.ராஜா, அரசு வழக்குரைஞர் ஆர்.சுப்ரமணி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.