மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் மஹாளய அமாவாசையையொட்டி பக்தா்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் ஆலயம் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். அமாவாசை தினங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோா் கூடுவாா்கள். அமாவாசை தினங்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.
கரோனா பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இந்த கோயில் கடந்த வாரம் முதல் பலத்த கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பா் 17-ஆம் தேதி மஹாளய அமாவாசையன்று பக்தா்கள் ஆயிரக்கணக்கில் கூடினால் கரோனா அபாயம் இருப்பதால் அன்று பக்தா்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திங்கள்கிழமை மேட்டூா் சாா்- ஆட்சியா் சரவணன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மேட்டூா் வட்டாட்சியா், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், மேச்சேரி பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும்பொருட்டு 17.9.2020 வியாழக்கிழமை மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு மேச்சேரி பத்கராகளியம்மன் கோயிலில் பக்தா்களின் பாதுகாப்பு கருதி பக்தா்களுக்கான தரிசனம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.