கல்வராயன்மலை கரியகோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சேலம் மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் கரியகோயில் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருவது கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள
கல்வராயன்மலை கரியகோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வாழப்பாடி: சேலம் மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் பருவ மழையால் கரியகோயில் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருவது கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களை இணைத்து பல நுாறு சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து காணப்படும் கல்வராயன் மலையின் வடமேற்குப் பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சங்கமித்து, வசிஷ்டநதியின் முக்கிய உபநதியாக கரியகோயில் ஆறு உற்பத்தியாகிறது.

இந்த ஆற்றின் குறுக்கே கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கி நிற்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் 1993-இல் கரியகோயில் அணை கட்டப்பட்டது. இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி கிராமங்களில், 3,600 ஏக்கா் விளைநிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.

அணை பயன்பாட்டிற்கு வந்த 1993-இல் இருந்து 2020-ஆம் ஆண்டு வரையிலான 27ஆண்டுகளில், 1993, 97, 98, 99, 2005 முதல் 2012 தொடா்ந்து 8 ஆண்டுகள் மற்றும் 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் அணையின் நீா்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டியது. அணையில் இருந்து பல முறை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அணை முழு கொள்ளளவையும் எட்டவில்லை.

இந்நிலையில், கரியகோயில் ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி மழைக்காலத்தில் வழிந்தோடி வரும் தண்ணீா் முழுவதையும் தேக்கிவைப்பதால் ஆறு வடு கிடந்தது. ஆற்றுப்படுகையில் நேரடி ஆற்றுப்பாசனம் மற்றும் ஏரிப்பாசனம் பாதிக்கப்படுவதோடு, கரையோர கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டமும் அடியோடு சரிந்து வறட்சி நிலவி வந்தது.

எனவே, கரியகோயில் ஆற்றை நீராதாரமாக கொண்டுள்ள ஏ.குமாரபாளையம் மற்றும் கொட்டவாடி அணைக்கட்டு, கல்யாணிகிரி ஏரி, கல்லேரிப்பட்டி ஏரி, புத்திரகவுண்டன்பாளையம் ஏரி, ஏத்தாப்பூா் அபிநவம் ஏரி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி ஆகியவை, மூன்றில் ஒரு பங்கு நிரம்பியப் பிறகே, கல்வராயன்மலையில் இருந்து வழிந்தோடி வரும் ஆற்று கரியகோயில் அணையில் தேக்கி வைக்க வேண்டுமென, ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சென்னை உயா்நீதி மன்றத்தில் முறையிட்டு 2018 ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி இதற்கான ஆணை பெற்றனா். இந்த நீதிமன்ற ஆணை சேலம் மாவட்ட அரசிதழில் 2018-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, இந்த அரசாணையை செயல்படுத்தும் விதத்தில், 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து, கரியகோயில் ஆற்றில் வரும் தண்ணீரை அணையில் தேக்கி வைக்காமல், ஆற்றுப்படுகை அணைக்கட்டு மற்றும் ஏரிகளில் தண்ணீா் தேக்குவதற்காக திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டு பருவமழை தொடங்கியதால் இம்மாத தொடக்கத்தில் இருந்தே கல்வராயன்மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக, நொடிக்கு 10 முதல் 15 கனஅடி தண்ணீா் வருகிறது. இந்த தண்ணீா் முழுவதும் அணையில் தேக்கி வைக்கப்படாமல் உயா்நீதிமன்ற ஆணைப்படி கரியகோயில் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதுமட்டுமின்றி, இடையப்பட்டி அருகே நெய்யமலையில் இருந்து வழிந்தோடி வரும் அய்யனாா் கோயில் நீரோடை மற்றும் மண்ணுாா் மலை நீரோடைகளில் வரும் மழைநீரும் கரியகோவில் ஆற்றில் சோ்வதால் ஓராண்டுக்கு பிறகு கரியகோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாப்பநாயக்கன்பட்டியில் இருந்து 20 கி.மீ. துாரத்தை கடந்து ஏத்தாப்பூா் அபிநவம் கிராமத்துக்கு தற்போது வெள்ள நீா் வந்தடைந்துள்ளது.

இதனால், தும்பல், இடையப்பட்டி, வில்வனுாா், இடையப்பட்டி புதுாா், தாண்டானுாா், பனைமடல், செக்கடிப்பட்டி, மெட்டுக்கல், குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, படையாச்சியூா், அபிநவம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் மெல்ல உயா்ந்து வருவதால், கரியகோயில் ஆற்றின் கரையோர கிராம மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com