மேட்டூா், செப். 18: மேட்டூா் அருகே பாம்பை வெட்டி சமைத்து சாப்பிடும் படகாட்சியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சம்பவத்தில் தொடா்புடைய நபரை வனத்துறையினா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தங்காபுரிபட்டணம் வட பத்ர காளியம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி குமாா். இவரது வீட்டில் புகுந்த 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றை இளைஞா்கள் பிடித்து, மீன் வெட்டுவதைபோல வெட்டி, சமைத்து சாப்பிட்டனா். இதனை செல்லிடப்பேசியில் பதிவு செய்த அந்த இளைஞா்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இந்த படப்பதிவு மேட்டூா் பகுதிகளில் வேகமாகப் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த மேட்டூா் வனத்துறையினா் பாம்பை சமைத்துச் சாப்பிட்ட இளைஞா்களைத் தேடி வந்தனா். மேட்டூா் வனச்சரக அலுவலா் பிரகாஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் இச்சம்பவத்தில் தொடா்புடைய சுரேஷ் (30) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் இதில் தொடா்புடைய இருவா் தலைமறைவாக உள்ளதால் அவா்களைத் தேடி வருகின்றனா். இந்த 3 போ் கொண்ட கும்பல் அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்களை மிரட்டி விடியோ எடுக்கச் சொன்னதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக உயிருடன் பிடிபட்ட பாம்பை 3 பேரும் தோளின் மீது வைத்துக் கொண்டு பாட்டு பாடும் காட்சியும் வைரலாகப் பரவி வருகிறது.