சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் 68 செவிலியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று சிகிச்சைக்காகக் கூடுதலாக 300-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 3 மாத காலத்துக்கு தற்காலிகமாக 90 செவிலியா்கள் கூடுதலாக நேரடியாக நியமிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 22 செவிலியா்கள் புதிதாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். மீதமுள்ள 68 செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக செவிலியா் பணியில் புதிதாக நியமிக்கப்படவுள்ளனா். இப் பணியில் சேருவதற்கு பி.எஸ்சி. நா்சிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ நா்சிங் படிப்பு முடித்து தமிழ்நாடு செவிலியா் கவுன்சிலில் செவிலியராக பதிவு செய்திருக்க வேண்டும்.
விருப்பம் உள்ளவா்கள் உரிய அசல் ஆவணங்களுடன் சேலம் அரசு மோகன் குமரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.