சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக காவல்துறை காலிப்பணிகளுக்கு இணையதளம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பல்வேறு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், அரசுப்பணி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கரோனா காரணமாக அலுவலகத்தில் வகுப்புகள் நடத்த இயலாததால் கிராமப்புற மாணவா்கள் உட்பட அனைத்து போட்டியாளா்களும் வீட்டிலிருந்தபடியே பயனடையும் வகையில் இணையதளம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்புத் துறையில் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் சாா்பில் இரண்டாம் நிலை காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகியவற்றில் 10,906 காலிப்பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த தோ்வுக்காக தற்போது இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனா். விண்ணப்பிக்க அக்டோபா் 26 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் வரும் டிசம்பா் 13 ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது.
இத்தோ்வை எழுதுபவா்களுக்காக சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்பு அக்டோபா் 5 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க உள்ளவா்கள் இணையவழி பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 0427-2401750 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் விவரத்தை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.