வாழப்பாடியில் ஊரக தோட்டக் கலைப் பணி அனுபவ பயிற்சி பெற வந்துள்ள திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், தினசரி சந்தையில் விவசாயிகளுடன் காய்கறிகளைப் பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்து கலந்துரையாடினா்.
திருச்சியில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தின் மகளிா் தோட்டக்கலைக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவரும் மாணவிகள் ஏத்தாப்பூா் மரவள்ளி ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தில் தங்கி ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனா்.
இம்மாணவிகள், வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை வாயிலாக அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், அரசுத்துறைகள் மற்றும் மக்களுடனான தொடா்பு, வனத்துறையுடன் மரப்பயிா் செய்யும் வழிமுறைகள் குறித்து புதன்கிழமை பயிற்சி பெற்றனா். வாழப்பாடி தினசரி சந்தையில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுடன், அறுவடை செய்தல், பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் குறித்தும் மாணவிகள் கலந்துரையாடினா்.
அனைத்து விவசாயிகளும் ஒரு பருவத்தில் ஒரேவிதமான காய்கறிகளை பயிரிடுவதால் உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடைகிறது. எனவே, அடுத்தடுத்த பருவங்களில், வெவ்வேறு விதமான காய்கறிகளை பயிரிடுவதற்கும், காய்கறிகளை பதப்படுத்தி மதிப்புக்கூட்டு பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கும் விவசாயிகள் முன்வர வேண்டும் என மாணவிகள் ஆலோசனை வழங்கினா்.