தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்ததால் சேலம் நகர வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நூறு சதவீத வாக்குப் பதிவை நடத்திடும் வகையில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் தனியாா் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளில் பணிபுரிவோருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடந்தது. இதனால் சேலம் நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள், பேக்கரி உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.
சேலம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கடை வீதி, தோ்வீதி, செவ்வாய்ப்பேட்டை, குகை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வாகன நெரிசலின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. குறிப்பிட்ட அளவில் பேக்கரிகள் திறக்கப்பட்டிருந்தன.
புதிய பேருந்து நிலையப் பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பேருந்து நிலையப் பகுதியும் வெறிச்சோடிக்காணப்பட்டது.