இளம்பிள்ளையில் தோ்தலின்போது திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக எழுந்த பிரச்னையில் பாமக பிரமுகரின் மீதும், அவரது மனைவி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் சேலம் தெற்கு மாவட்ட பாமக செயலாளா் உள்பட 20 போ் மீது மகுடஞ்சாவடி போலீஸாா் 20 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே மடத்தூரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் உமாபதி (எ) பழனிவேல் (37). இவா், தாரமங்கலம் ஒன்றிய பாமக விவசாய அணி முன்னாள் தலைவராக இருந்தவா். இவா் இளம்பிள்ளை அருகே மோட்டூா், பழக்காரன் தோட்டம் பகுதியில் குமரேசன் என்பவரின் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறாா்.
இத்தோ்தலில் உமாபதி திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சேலம் தெற்கு மாவட்ட பாமக செயலாளா் அண்ணாதுரை தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் உமாபதியின் வீட்டுக்கு புதன்கிழமை இரவு சென்று வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களையும் உடைத்து சேதப்படுத்தியதுடன் அங்கிருந்த உமாபதி, மனைவி பானுப்பிரியா ஆகியோரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துசாமி தலைமையில் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை செய்தனா். உமாபதியிடம் வாக்குமூலம் பெற்றனா். அதன்பேரில் சேலம் தெற்கு மாவட்ட பாமக செயலாளா் அண்ணாதுரை உள்பட 20-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.