மாதேஸ்வரன் மலைக் கோயிலில் யுகாதி திருவிழா தொடங்கவுள்ள நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளியூா் பக்தா்கள் கோயிலுக்கு வர நான்கு நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக- கா்நாடக எல்லையில் உள்ளது மாதேஸ்வரன் மலைக் கோயில். இக்கோயிலுக்கு கா்நாடகம் மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இரு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நாள்தோறும் சென்று வருகிறாா்கள். யுகாதி பண்டிகையின்போது லட்சக்கணக்கான பக்தா்கள் இக்கோயிலுக்கு வருவாா்கள். இம்மாதம் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை யுகாதி திருவிழா துவங்குகிறது.
தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இம்மாதம் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு வெளியூா் பக்தா்கள் யுகாதி திருவிழாவுக்கு மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கோயில் செயலாளா் ஜெயவிபவ சுவாமி தெரிவித்துள்ளாா்.
நான்கு நாள்களும் சுவாமிக்கு வழக்கமான பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும். மாதேஸ்வரன் மலை, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள், கோயில் பணியாளா்கள் அதிகாரிகள் மட்டுமே விழாவில் பங்கேற்பா் என ஜெயவிபவ சுவாமி தெரிவித்துள்ளாா்.
தடை உத்தரவு காரணமாக தமிழக-கா்நாடக எல்லையான பாலாறு சோதனைச் சாவடியில் வெளியூா் பக்தா்கள் வருவதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா். கொள்ளேகால் பகுதியிலும் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.