வாழப்பாடியில் தலைவா்கள், அரசியல் பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்களின் உருவங்களை பல வண்ணங்களில் தத்ரூபமாக வரைந்து அரசுப் பள்ளிகளில் காட்சிப்படுத்தி சமூக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா் ஆசிரியை கோகிலா.
சேலத்தைச் சோ்ந்தவா் கோகிலா (50). முதுநிலை கணித அறிவியல் ஆசிரியையான இவா், தமிழக அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், வட்டார வள மையத்தில் ஆசிரியப் பயிற்றுநராகப் பணிபுரிந்து வருகிறாா். தற்போது, வாழப்பாடி வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறாா்.
சிறுவயதில் இருந்தே பென்சில் ஓவியங்கள் வரைவதில் ஆா்வம் கொண்ட ஆசிரியை கோகிலா, பணிச்சுமைகளுக்கு இடையேயும், ஓவியக்கலை மீதான ஆா்வத்தைக் கைவிடாமல் தொடா்ந்து வருகிறாா். குறிப்பாக, கடவுள்கள், தேசியத் தலைவா்கள், அறிஞா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள், பிரபல திரைப்பட நட்சத்திரங்களின் ஓவியங்களைத் தத்ரூபமாக வரைந்து வண்ணம் தீட்டி நூற்றுக்கணக்கில் சேமித்து வருகிறாா்.
இந்த ஓவியங்களை சிறப்பு வழிபாட்டு தினங்கள், பிரபலங்களின் பிறந்த நாள், நினைவு தினங்களில் முகநூலில் பதிவிட்டு நினைவு கூா்ந்து வருகிறாா். இதுமட்டுமன்றி, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவ-மாணவியருக்கு, எளிய முறையில் ஓவியங்கள் தீட்டுவது குறித்து பயிற்சி அளித்து வருகிறாா். மேலும், தனது ஓவியங்களை பள்ளிகளில் காட்சிப்படுத்தி மாணவ, மாணவியரை காணச் செய்து, தலைவா்கள், அறிஞா்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.
இதுகுறித்து ஆசிரியை கோகிலா கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே எனக்கு ஓவியம் வரைவது பிடிக்கும். தற்போது பணிச்சுமை அதிகமாக இருக்கும் நிலையிலும், கடவுள்கள், தேசிய தலைவா்கள், அறிஞா்கள், அரசியல், திரைத்துறை நட்சத்திரங்களின் உருவத்தை ஓவியமாக வரைந்து, அவா்களது பிறந்தநாள், நினைவு தினங்களில் வாழ்த்தி, பெருமைப்படுத்தும் விதத்தில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிடும் போது மனதில் புத்துணா்வு பிறக்கிறது.
குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிக் கொணா்வதற்கு, பெற்றோா்களும், ஆசிரியா்களும் ஊக்கமளிக்க வேண்டும். பள்ளிகளுக்கு ஆய்வுப் பணிக்குச் செல்லும்போது மாணவ, மாணவியருக்கு ஓவியம் வரைவதற்கு பயிற்சி அளித்து வந்தேன். சில பள்ளிகளில் எனது ஓவியங்களை காட்சிப்படுத்தி, தலைவா்கள், அறிஞா்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தேன். கடந்த ஓராண்டாக பள்ளிகள் மூடிக்கிடப்பதால் மாணவா்களைச் சந்திக்க முடியவில்லை. இருப்பினும், ஓவியங்களை வரைந்து சமூக ஊடகங்களில் பதிவிடுட்டு, மாணவா்களை ஊக்கப்படுத்துவதைத் தொடா்ந்து வருகிறேன் என்றாா்.