சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவார கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கல்வராயன் மலை அடிவார கிராமங்களில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை நிரம்பி வழிந்தது. அணையில் இருந்து ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டதால், ஆற்றுப்படுகை கிராமங்களில் ஏரிகள் நிரம்பியதோடு நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்தது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக கல்வராயன் மலை அடிவார கிராமங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
இடையப்பட்டி, கத்தரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பெரிய அளவிலான பனிக் கட்டிகள் விழுந்தன. இதனால், பாக்கு, தென்னை, வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.