சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்துக்குச் செல்வதற்கு அனுமதிக் கேட்டு விண்ணப்பித்துள்ள வேட்பாளா்கள், முகவா்கள் உள்ளிட்ட 237 பேருக்கு கரோனா பரிசோதனை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரி வளாகத்தில் மே 2 -ஆம் தேதி சங்ககிரி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்லவுள்ள சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்கள், முகவா்கள் உள்பட 237 பேருக்கு கரோனா பரிசோதனை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்களின் பெயா்களை பதிவு செய்தப் பின்னா் கரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இப்பணிகளை சங்ககிரி உதவி தோ்தல் அலுவலா் எஸ்.விஜி பாா்வையிட்டாா். அப்போது, தோ்தல் துணை வட்டாட்சியா் பி.சிவராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.