75ஆவது சுதந்திரதினத்தினையொட்டி சங்ககிரியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்ததிர போராட்ட வீரர் தீரன்சின்னமலை சூழ்ச்சியின் காரணமாக ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18ம் தேதி சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். அதனையடுத்து தமிழகரசின் சார்பில் கடந்த 2013ம் வருடம் சங்ககிரியை அடுத்த ஈரோடு-பவானி பிரிவு சாலையில் அவரது நினைவாக நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு தமிழகரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் தீரன்சின்னமலை பிறந்ததினத்தன்றும், ஆடி 18ம் தேதியன்றும் சங்ககிரி மலைக்கோட்டை அடிவராம், ஈரோடு-பவானி பிரிவு சாலையில் உள்ள அவரது நினைவுச்சின்னத்திலும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டின் 75வது சுதந்திரதினத்தினையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து சுதந்திரபோராட்ட வீரர்கள், தலைவர்கள் உள்ள சிலைகள், நினைவு மணி மண்டபங்கள், நினைவு சின்னங்களில் மரியாதை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக முதல்வரின் அறிவிப்பினையடுத்து தீரன்சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி மலைக்கோட்டையின் அடிவாரத்திலும், நினைவுச்சின்னம் உள்ள பகுதிகளிலும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழகரசின் சார்பில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன் தலைமையில் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் சி.நல்லசிவம், வட்டாட்சியர் எஸ்.விஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (நிர்வாகம்) எஸ்.ராமசந்தர், (கிராம ஊராட்சி) என்.எஸ்.ரவிச்சந்திரன், சங்ககிரி காவல் ஆய்வாளர் ஆர்.தேவி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் சிவராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.