சங்ககிரி வட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தி பழைய பேருந்துநிலையம் அருகே பத்து நிமிடம் வாகன நிறுத்த போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வட்ட விவசாயிகள் சங்கத்தின் செயலர் ராஜேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட செயலர் ஏ.ராமமூர்த்தி பொதுமக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்தியரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வேண்டுமென வலியுறுத்தினார். பின்னர் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி சங்ககிரி வட்டக்கிளை செயலர் ஏ.ஆறுமுகம், வட்டக்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர்கள் ராமசாமி, மாரிமுத்து, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட நிர்வாகி ஜெயலட்சுமி, தஸ்தகீர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.